பூநகரி விபத்தில் கனேடிய தமிழர் பலி!
பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த கனேடிய தமிழர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கனடா பிரஜாவுரிமை பெற்ற செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது 66) என்பவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், கடந்த மாதம் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பி வேலணையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி விசுவமடுவிலுள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் சென்று மீண்டும் வீடு திரும்பும் வழியில்,மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அருகிலுள்ளவர்கள் படுகாயமடைந்த அவரை பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.