யாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா?
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதிச் சென்றமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) புலம்பெயர் சமூகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்குகொள்வதற்காக குறித்த ஊடகவியலாளர், உடுப்பிட்டி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதனையடுத்து விபத்துக்குள்ளாகிய ஊடகவியலாளரை காப்பாற்றாது, அவரை மோதிய நபர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த ஊடகவியலாளரை அங்கிருந்தவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சாதாரண விபத்துச் சம்பவமா? அல்லது திட்டமிட்ட தாக்குதல் சம்பவமா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.