யாழில் வாள் வெட்டு கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயம்!
யாழ்.சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை உட்புகுந்த நால்வர் கொண்ட குழுவொன்று வீட்டில் இருந்தவர்கள் மீது கொட்டன்களால் தாக்கி வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த கனகரத்தினம் கௌதமன் (வயது 27) மற்றும் பரராசசிங்கம் கோபிநாத் (வயது 28) ஆகிய இருவரே காயமடைந்துள்ளனர்.
அதில் கௌதமன் வாள் வெட்டுக்கு இலக்காகி கை விரல் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் அயலவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழில் வாள் வெட்டு குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

