தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!

தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த டிமோ பட்டா லொறியும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் தம்பலகாமம் 174 கட்டைப் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் கொழும்பு – சீதுவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 மட்டும் 26 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது டிமோ பட்டாவில் பயணித்த சாரதியும், அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளதாகவும், பின்னால் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கந்தளாய் – கன்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net