அமைச்சர் றிசாத் நல்லவரா?

அமைச்சர் றிசாத் நல்லவரா? இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பன பற்றியெல்லாம் பேச,எழுத முதலில் நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக 20 முஸ்லிங்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் இரண்டு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள். இன்னும் சிலர் முதன்மை கட்சிகளின் முக்கிய பதவிநிலையில் இருப்பவர்கள்.

அமைச்சராக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகளை மாத்திரமில்லாது சிங்கள,தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்று எம்.பியாக வந்தவர் .

அதேபோன்றே அமைச்சராக இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் முஸ்லிம் வாக்குகளை மாத்திரமில்லாது தமிழ் சகோதர்களின் வாக்குகளை பெற்று எம்.பியாக வந்த ஒருவர். ஆகவே இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களாக இருந்தாலும் இவர்கள் பாராளுமன்றம் அனுப்பியதில் ஏனைய இன சகோதரர்களுக்கும் பாரிய பங்கு இருக்கிறது. அதே போன்றுதான் இன்னும் பல அமைச்சர்களும்,எம்பிக்களின் நிலையும் கூட

இவைகள் எல்லாம் இப்படி இருக்க எமது எம்.பிக்களில் பலருக்கு ஒரு சிக்கலும் இல்லை. ஏனெனில் அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் இருந்துவிட்டு செல்வதுதான். இதில் சில அமைச்சர்களும் எம்பிக்களும் தமது நாடாளுமன்ற ஆசனத்தை தக்கவைக்க வேண்டுமெனில் மௌனமாக இருக்கவேண்டியது விதியின் சதி.

வன்னியை சேர்ந்த காதர் மஸ்தான் எம்.பிக்கு அமைச்சர் றிசாத் நேரடி அரசியல் போட்டியாளர். அதே போன்றுதான் அமைச்சர் ரிசாத்துக்கும் காதர் மஸ்தான் எம்.பி போட்டியானவர்.

தமிழ் மக்களின் வாக்குகள் அமைச்சர் ரிஸாத்துக்கு அதிகமாக அந்த மக்கள் வழங்குவதால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் றிசாத் நேரடி எதிரியாக மாறிவிட்டார் என்பது காலம் செய்த கோலம்.

ஆனால் வடக்கின் அரசியல்வாதியான அமைச்சர் ரிசாத்துக்கு சிங்கள அரசியல்வாதிகள் எப்படி எதிரியானார்கள் என்பதை இங்கு நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

அமைச்சர் றிசாத்தை ஊழல்வாதியாக, கடத்தல்காரனாக,இப்போது பயங்கரவாதியாக ஏன் சிங்கள சமூகம் பார்க்கிறது. ஒரு முஸ்லிம் அமைச்சரின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை வரும் அளவுக்கு அவர் மீது ஏன் இவ்வளவு கோபம்.

முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாக அவர் குரல்கொடுப்பதால் தான் அவர் மீது இவ்வளவு சிக்கல் என நாம் அவரிடமிருந்து வாங்கும் வெகுமதிகளுக்காக கூறிவிட்டு செல்லலாமே ஒழியே எதார்த்தம் என்ன என்பதை நாம் நன்றாக அறிய வேண்டும்.

அமைச்சர் றிசாத்தை விட அதிகமான குரலை கடும் சத்தமாக கொடுத்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எனும் இயக்கம் இருந்தது அதிலும் முஸ்லிங்கள் அங்கம் வகித்ததாக வரலாறுகள் கூறுகிறது. ஆனால் தலைவர் அஷ்ரபை யாரும் பயங்கரவாதியாக விரல் நீட்டவில்லை. கப்பல்,துறைமுகங்கள், புனர்வாழ்வு , புனரமைப்பு எனும் முக்கிய பல அமைச்சை தன்வசம் வைத்திருந்த அவர் மீது ஊழல்,கடத்தல் குற்றச்சாட்டுக்கள் இருந்திருக்கவில்லை. அமைச்சர் றிசாத்தை போன்றே தலைவர் அஷ்ரபும் நேரடியாக வன்செயலில் பாதிக்கப்பட்டவர்தான்.

இருந்தாலும் தலைவர் அஷ்ரபின் மீது சொத்துகுவிப்பு கதைகள் ஷொப்பிங் பேக் கதைகள் என்று ஒன்றும் பெரிதாக இல்லை என்பது வெளிப்படையான உண்மை

இந்த நாடாளுமன்ற வரலாற்றில் முஸ்லிங்களின் உரிமைக்காக உரத்து மிக சத்தமாக சர்வதேசமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு குரல் கொடுத்தோர்களாக எம்.எஸ்.காரியப்பர், ஏ.சி.எஸ்.ஹமீது,பதியுதீன் மஹ்முத், எம்.சி. அஹமட், ஏ.ஆர்.எம்.மன்ஸூர் ,தலைவர் அஸ்ரப், அதாவுல்லாஹ், சேகு இஸ்ஸதீன் , பேரியல் அஸ்ரப், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் என ஆரம்பித்து அண்மைய இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் உரை வரை பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.

இவர்கள் யார் மீதும் முன்வைக்கப்படாத திருடன் பட்டமும், கொள்ளைக்காரன் எனும் கிரீடமும், பயங்கரவாதி எனும் பதக்கமும் ஏன் முழுவதுமாக அமைச்சர் றிசாத் மீது அணிவிக்கப்படுகிறது?

இந்த நாடாளுமன்ற வரலாற்றில் முஸ்லிங்களின் உரிமைக்காக உரத்து மிக சத்தமாக சர்வதேசமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு குரல் கொடுத்தோர்களாக எம்.எஸ்.காரியப்பர், ஏ.சி.எஸ்.ஹமீது,பதியுதீன் மஹ்முத், எம்.சி. அஹமட், ஏ.ஆர்.எம்.மன்ஸூர் ,தலைவர் அஸ்ரப், ஏ.எல்.எம் .அதாவுல்லாஹ், புலவர் சேகு இஸ்ஸதீன் , பேரியல் இஸ்மாயில் அஸ்ரப், ரவூப் ஹக்கீம், எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் என ஆரம்பித்து அண்மைய இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் உரை வரை பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.

இவர்கள் யார் மீதும் முன்வைக்கப்படாத திருடன் பட்டமும், கொள்ளைக்காரன் எனும் கிரீடமும், பயங்கரவாதி எனும் பதக்கமும்,போதைவியாபாரி எனும் மகுடமும் ஏன் முழுவதுமாக அமைச்சர் றிசாத் மீது அணிவிக்கப்படுகிறது? இவர்களையெல்லாம் விட அதிகமாகவா அமைச்சர் றிசாத் குரல் கொடுத்திருக்கிறார் ? அப்படி அவர் குரல் கொடுத்து இந்த சமூகம் கொண்டாடிய அனுகூலங்கள் எவை?

அண்மைய காலங்களில் அமைச்சராக இருந்த எமது எந்த எம்பிக்கள் ஒரே அமைச்சை பல தசாப்த காலமாக கட்டிப்பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்திருக்கிறார்கள்? அமைச்சர் ஹக்கீம் நீதி,தபால், முஸ்லிம் விவகாரம், நீர்வழங்கல்,நகரதிட்டமிடல், என ஒவ்வொரு அமைச்சின் கட்டிடமாக மாறி மாறி தனது சேவைகள் வழங்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கூட நீர்வழங்கல், பெருந்தெருக்கள், கல்வி, மாகாண சபைகள் என தமது சேவைகளையும் ஒவ்வொரு அமைச்சின் கட்டிடமாக மாறி மாறி செய்துள்ளார்.

அதேபோன்றுதான் சகல முஸ்லீம்,தமிழ், சிங்கள அமைச்சர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் மட்டும் அந்த வர்த்தக,வாணிப அமைச்சை பேரம் பேசி பெற்றுக்கொள்வது எல்லோருக்கும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இப்ராஹிம் ஹாஜியுடனான புகைப்படங்கள், ஊடகங்களில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரச்சாரங்களை தெளிவுபடுத்தும் முகமாக தமிழில் பேசிய அளவுக்கு சிங்களத்தில் பேசினார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.

தனது வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய பாரிய பொறுப்பு இருந்தும் ஏன் அந்த வர்த்தக அமைச்சை மட்டும் விடுவதாக இல்லை என்பதே பிரச்சினைகளின் ஆணிவேர். அந்த அமைச்சின் மூலம் அமைச்சர் றிசாத் உழைத்த பணத்தை விட கெட்டபெயர்களும்,அவமானங்களும் அதிகம்.

போதைப்பொருள் கையும் களவுமாக சிக்குகிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவரின் உயரத்தையும் நிறையையும் விட அதிகமாக இருக்கிறது. அதுதான் அவரை திருடனாக வெளிக்காட்டுகிறது. சிங்களத்தில் பேசவேண்டியவர்களிடம் பேசாமல் தேவையே இல்லாமல் அவர் தமிழில் பேசிப்பேசி இருந்துவிட்டார். ஆனால் அவர் எதிர்பாராமல் விதைத்த வினைகள் இப்போது கழுத்துக்கு கத்தியாக வந்து நிற்கிறது.

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத்தை விட சிரேஷ்டமான பலரும் இது பல்லின நாடு என்பதை அறிந்துகொண்டு நடந்தபோது அமைச்சர் றிசாத் மட்டும் தன்னை ஹீரோவாக்க முனைந்து இன்று சீரோவாகி இருக்கிறார்.

அமைச்சு பறிபோனால் அல்லது அமைச்சை தூக்கி வீசினால் தனது கட்சி அழிந்துவிடும் எமது பிரமுகர்கள் வேறு கொப்புக்களுக்கு பாய்ந்துவிடுவார்கள் என அஞ்சிதயங்கி நின்றதால் இன்று அனாதையாக நிற்கிறார்.

அவரின் போக்குகளை மாலுமி போன்று சரியான திசைக்கு செலுத்திக்கொண்டிருந்த மக்கள் காங்கிரசின் இஸ்தாபர்களில் முக்கியமான சிரேஷ்ட சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய தேசிய பட்டியல் எம்பியை கொடுக்காமல் வியாபாரம் செய்ய முனைந்ததால் இன்று அந்த பதவியே அவருக்கு ஆபத்தாக அமைந்துவிட்ட்டது.

சரியான இடங்களில் பிரச்சினையை அணுகி தீர்த்துவைக்கும் ஆளுமை கொண்ட பலரையும் சில அரசியல் அனாதைகளின் இடுவம்புக்கு துணைபோகி மக்கள் காங்கிரசில் இருந்து விளக்கியதால் அல்லது அவர்கள் ஒதுங்கியதால் இன்று அந்த வெற்றிடங்கள் தெளிவாக தெரிகிறது.

அமைச்சர் றிசாத்தை வழிநடத்தும் புத்திஜீவிகள் சில பதவிமோகம் கொண்டோரின் சதிகளில் சிக்கி காணாமல் ஆக்கப்பட்டதால் இன்று அமைச்சர் றிசாத் எல்லாவற்றையும் சேர்த்துவைத்து தன்னம் தனியாக அனுபவிக்கிறார்.

உதவி செய்யவேண்டியவர்கள் தூரத்தே இருந்து பார்வையாளர்களாக கருத்துச்சொல்லும் அவலத்தில் அமைச்சர் றிஸாத்தின் அண்மைய நாட்கள் அமைந்திருக்கிறது.

என்றாலும் தனது முன் ஆயத்தமாக அமைச்சரால் உருவாக்கப்பட்ட விசேட சமூகவலைத்தள தாக்குதல் படை அதாவது வலைத்தள வெகுமதி எழுத்தாளர்கள் தமது பணியை சிறப்பாக செய்வதே அமைச்சருக்கு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.

நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net