பாலைப்பழம் விற்ற சிறுவனின் கல்வியை தொடர விஜயகலா நடவடிக்கை.

பாலைப்பழம் விற்ற சிறுவனின் கல்வியை தொடர விஜயகலா நடவடிக்கை.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திய மாணவன், கல்வியை தொடர நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் சந்தியில், பாடசாலை நேரத்தில், பாடசாலைக்கு செல்லாமல் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருந்த 13 வயது மாணவன், கல்வி இராஜாங்க அமைச்சரினால் இனங்காணப்பட்டு, கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிய வேளை, ஏ9 வீதி பரந்தன் சந்தியில், வீதி அருகில் சிறுவன் ஒருவன் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருப்பதை அவதானித்தார்.

அதனைத்தொடர்ந்து, உடனடியாக சிறுவனை தனது வாகனத்திற்கு அருகில் அழைத்து, சிறுவன் பாடசாலை மாணவன் என்பதை உறுதி செய்து, உடனடியாக கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாணவன் பாடசாலை செல்லாமல் பாலைப்பழம் விற்பது தொடர்பில் விளங்கப்படுத்தியதுடன், 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள், வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதனை அனுமதிக்க வேண்டாம்; எனவும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக, பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மாணவன் இனிமேல் பாடசாலை நேரத்தில் இவ்வாறான வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் எனவும், மாணவனின் பெற்றோரை சந்தித்து அறிவுரை வழங்குமாறும், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நிலையில், மாணவன் விற்பதற்காக கையில் வைத்திருந்த பாலைப்பழத்தை காசு கொடுத்து வாங்கிய அமைச்சர், அந்த மாணவனை வீடு சென்று கல்வி கற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net