முஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல் பௌத்தர்களின் ஆதிக்கத்திற்கு சாட்சி!

முஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல் பௌத்தர்களின் ஆதிக்கத்திற்கு சாட்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரரின் போராட்டம் காரணமாக முஸ்லிம் தலைவர்கள் பதவி விலகியமை இலங்கை அரசியலில் பௌத்த மதகுருக்களின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

அவரின் போராட்டத்தின் முடிவில் ஆளுநர்கள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேர் நேற்று இராஜினாமா செய்திருந்தனர்.

இது இலங்கை அரசியலில் பௌத்த மதகுருக்களின் ஆதிக்கம் எவ்வாறு செலுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு சாட்சியாகும். இது இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

அரசாங்கம் எப்போதுமே பௌத்த மதத்திற்கே முன்னுரிமை கொடுத்து வருகிறது. கோரிக்கைகள் நியாயமானவையா என்பதைக்காட்டிலும் பௌத்த மதகுருமார் கூறுவதற்கே அரசியல்வாதிகள் செவிசாய்க்கின்றனர்.

இந்த நிலை இலங்கை அரசியலுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net