மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதோடு, இப்பற்றாக்குறை மாணவர்களின் கல்வி நிலை பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் தொடர்பான நிகழ்வும் இன்று (05) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய மூன்று கோட்டங்களிலும் தரம் 5 மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்காக மூன்று நிலையங்கள் அமைத்து விசேட கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் கல்வி நிலை பின்தங்கியுள்ளமைக்கு பிரதான காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

இங்கு ஆரம்பப் பிரிவில் 76 ஆசிரியர்களுக்கும்; இடைநிலைப் பிரிவில் 80 ஆசிரியர்களுக்குமாக மொத்தம் 156 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன’என்றார்.

இதேவேளை, மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்த வேண்டிய நிலைமை உள்ளது.

நாம் எதிர்காலத்தில் இவ்வலயத்திலுள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தினை உயர்த்துவதற்காக சிறந்த வளவாளர்களை பெற்று வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு உதவுவதற்கு சமூக நலன் சார்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net