யாழில் கல்லூரிக்கு முன்பாக விபத்து; 4 மாணவர்கள் காயம்!
யாழ்ப்பாணம், ஒஸ்மானியா கல்லூரிக்கு முன்பாக இன்று (06) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார்தெரிவித்தனர்.
யாழ். கொட்டடிப் பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நடந்து வந்துகொண்டிருந்த மாணவர்கள் மீது மோதியதாகவும், இதில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த முச்சக்கரவண்டிச் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.