வவுனியாவில் அதிபரின் செயற்பாட்டால் மயங்கி விழுந்த ஆசிரியர்.

அதிபரின் தரக்குறைவான வார்த்தைகளால் ஆசிரியை ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ள சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி அதிபருக்கும் அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கும் இடையில் நேற்று முரண்பாடு இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அதிபர் ஆசிரியயை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

அதிபரின் இவ்வாறான வார்த்தை பிரயோகத்தை சற்றும் எதிர்பாராத ஆசிரியை மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் பாடசாலை அதிபர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அந்த ஆசிரியை அப்பாடசாலையின் உப அதிபர் என தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு வினவிய போது,

எமது பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றும் ஒரு பெண்ணிடம் சில பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர் பணிகளை சீராக செய்ய மாட்டார் என்பது எனக்கு தெரியும். இதனால் அதனை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.

அத்துடன் இரண்டாம் ஆண்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார். அதனால் குறித்த உப அதிபரை அந்த வகுப்பில் கற்பிற்குமாறு தெரிவித்தேன்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட உப அதிபர் தெரிவிக்கும் போது,

எனக்கு அதிபரினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதுடன் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

தகாத வார்த்தைகளினால் பேசி என்னை வெளியேறுமாறும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளேன். அதிபரினால் எனக்கு இளைக்கப்பட்ட அநீதிகள் குறித்து வலய கல்விப்பணிப்பாளருக்கு முற்கூட்டியே முறையிட்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் சுரேந்திரன் அன்னமலர் தெரிவிக்கும் போது,

ஆசிரியர் முறையிட்டுள்ளது குறித்து அதிபர், ஆசிரியரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பாக அதிபரிடம் அறிக்கை கோரியிருந்தேன் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net