கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் இன்று பல அரச சலுகைகள் வழங்க்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசிற்கு பல்வேறு வழிகளிலும் உதவும் எமது அரசியல் தலைமைகள் தற்போது தேர்தல் நெருங்குகின்றபோது கிணறு கட்டி தருகின்றோம் எனவும், பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் வழங்கப்படும் உதவிகளைகூட பெற்றுக்கொள்ள விரும்பாத பலர் உள்ள நிலையில் அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றும் வகையிலும், போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் இவ்வாறு செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில்,

இன்று கம்பெரலிய, சமுர்த்தி போன்றவற்றை வழங்குவதில் எமது அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுவதாகவும், அது கவலை அளிப்பதாகவும் தெரிவித்த அவர், பல்வேறு சந்தர்ப்பங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது வங்கி கணக்குகளை நிரப்பிக்கொள்ளவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முஸ்லிம் தலைவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கின்ற போதிலும் அவர்களது சமூகத்திற்கு ஓர் பிரச்சினை ஏற்படுகின்றபோது ஒற்றமையாக தீர்மானத்தை எட்டுவதாகவும், அது எமது அரசியல் தலைமைகளிடம் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர், எமது அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை விற்பதிலேதான் போட்டி போடுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டு கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net