ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழில் அனுட்டிப்பு
இறுதி யுத்த நடவடிக்கையின் போது உயிரிழந்த ஊடகவியலாளரான நாட்டுப் பற்றாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி அமைவிடத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் ‘சத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல்’ எனும் நூல் வெளியீடும் இடம்பெற்றது.
யாழ். ஊடக அமையம் மற்றும் எழுகலை இலக்கியப் பேரவை என்பவை இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் ஊடக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அவரது நண்பர்கள் நினைவுரைகளை ஆற்றினர்.
இறுதி யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடனான ஊடகப்பணியில் பங்கெடுத்திருந்த பு.சத்தியமூர்த்தி இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.
அவரது உன்னதமான ஊடகப் பணியினை கௌரவித்து விடுதலைப் புலிகளால் நாட்டுப் பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


