கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் வரையில், அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று (புதன்கிழமை) மன்னார் நீதிமன்றில் இதனை தெரிவித்ததாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களின் 5 மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை, கடந்த 16 ஆம் திகதி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால் பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து பெறப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையினை இன்று (புதன்கிழமை) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மன்னார் நீதிமன்றத்தில் கையளித்திருந்தார்.

இந்தநிலையில், குறித்த அறிக்கை தொடர்பான விசாரனைகள், மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் ஆகியோர் இதன்போது நீமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போதே அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாதென மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net