ஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்! சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கலாமா?
எமது கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும் மேம்பட்ட நாம் ஒழுக்க நெறியில் சிறந்தவர்களாகத் திகழ்ந்து உலகுக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் நாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பாரதிபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அன்னதான மண்டபத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் எமது இன விடுதலைக்காகப் போராடுகின்ற இனமாகக் காணப்படுகின்ற போதிலும் எமக்கென்றொரு தனித்துவமான பண்பாட்டோடும், கலாசாரத்தோடும் உலகத்தவர்கள் விரும்பும் வகையில் நல்ல நெறிமுறைப்படி வாழ்பவர்கள் தான் நாம்.
எமக்குரிய தனிமனித ஒழுக்கத்தைக் கட்டிக் காத்து எமது இனத்தின் பெருமையை உலகுக்கே முன்னுதாரணமானவர்கள் தான் நாம்.
அறவழியில் வாழ்ந்து உலகுக்கே நல்லறங்களைப் போதித்தவர்கள் நாம். எமது இனத்தின் பெருமையை வரலாற்று ஆவணங்கள் இன்றும் பறை சாற்றி நிற்கின்றன.
ஆனால் தற்காலத்தில் எமது இளைய தலைமுறையிடத்தில் ஒழுக்க நெறி பிறழ்வான எமது தனித்துவத்தை சிதைத்தழிப்பதற்கான செயற்பாடுகள் வேண்டுமென்றே விதைக்கப்பட்டு வருவதை நோக்க முடிகின்றது.
கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் பிற தேசங்களிலிருந்து எமது பிரதேசங்களுக்குக் கொண்டுவரப்பட்டு எமது இளைய தலைமுறையினரை இலக்கு வைத்து விற்கப்படுகின்றது.
இது எமது இனத்தின் தனித்துவத்தை அழிப்பதற்காக எங்கேயோ திட்டமிடப்பட்ட செயற்பாடு என்பது புலனாகின்றது.
எமது இளைய தலைமுறையினர் எமது வரலாற்றை மறந்து நாம் யார் என்பதை மறந்து செயற்படுவது எமது இனத்தை மிக மோசமான ஆரோக்கியமற்ற ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும்.
எனவே எமது இன்றைய இளையவர்கள் தான் எமது இனத்தின் தனித்துவத்தைக் கட்டிக் காத்து எமது இன அடையாளங்களைப் பேணி தனிமனித ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி எமது இனத்திற்கு நல் வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்.
அதற்கு இப்படியான ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள், அறத்தில் மேம்பட்ட பெரியார்கள் சிறந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி நல்வழிப்படுத்துவதுடன் எமது தனித்துவங்களையும் பேணி எமது இலக்கு நோக்கிய எமது விடுதலையை அடைவதற்கு பலம் சேர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.