மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
மன்னார் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பரப்பு கடந்தான் காட்டு பகுதியில் ஆணொருவரின் சடலம் இருப்பதனை பொதுமகன் ஒருவர் அவதானித்துள்ளார். இதையடுத்து அடம்பன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அடம்பன் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் உயிரிழந்த நபர் 35 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் உயிரிழந்தவர் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்தவரெனவும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.