மகிந்த தரப்பினரின் இரகசிய நடவடிக்கை?
மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செய்தியில்,
அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும், கூட்டு எதிரணியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக இருந்த தரிந்து பாலசூரிய ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ரொரிங்டன் அவென்யூவில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து, ஜப்பான், நோர்வே, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்றனர் என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார், என குறிப்பிடப்பட்டுள்ளது.