கொக்குவில் பகுதியில் இன்றும் சுற்றிவளைப்பு!- வீடுகள் சோதனை!

கொக்குவில் பகுதியில் இன்றும் சுற்றிவளைப்பு!- வீடுகள் சோதனை!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதி இன்றும் விசேட பொலிஸ் அணியினரால் சுற்றிவளைக்கப்பட்டு, வீடுகளுக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்வதாகவும், பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து விசேட பொலிஸ் அணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் சட்டம் ஒழுங்கைக் சீர்க்குலைக்கும் சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கோடு, கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில், சில வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, சந்தேகமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இச்சுற்றிவளைப்பின்போது எவ்வித கைதுகளோ, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலோ இதுவரை தகவல்கள் இல்லை.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net