யாழில் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு
யாழில் நத்தார் தினத்தன்று குளத்திற்கு குளிக்க சென்ற குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், மணியம் தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதே பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ராசன் குலேன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நத்தார் தினமாகிய நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது அவர் குளத்தில் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. இரவு வேளை என்பதனால் சடலத்தை மீட்க முடியாத நிலை நேற்று காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததன் பின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.