யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் தப்பியோட்டம்!

யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் தப்பியோட்டம்!

யாழ். நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 24ஆம் விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது.

எனினும் சில மணி நேரங்களில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். நாவாந்துறை சந்தைப் பகுதியில் நேற்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார்.

அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

எனினும் சுமார் 2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் பிடிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை அழைத்துச் சென்றனர். இந்த நிலையிலேயே அந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net