கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது!

கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது!

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பை ஏற்கத் தயார். ஆனால் அதற்கான முயற்சி தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் நான் அதில் முழுமையாக ஈடுபடுவுள்ளேன்.

எனது நம்பிக்கை வழிநடத்தல் குழுவின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், இடைக்கால அறிக்கை வெளிவரவேண்டும் என்பதே எதிர்பார்பாகும்.

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் வரும் என்று தாம் நம்புவதாகவும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கருத்துகளை வைத்து கணிப்புக்களை மேற்கொள்ள முடியாது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இதைவிட மும்முரமாக இந்த வேலைகள் நடைபெறக்கூடும். கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.

ஒக்டோபர் சதிப் புரட்சிக் காலத்தைப் பார்த்தால், மீண்டும் அரசு மாற்றப்படும் என்று எவரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, ஆனால, அது மாற்றப்பட்டமை நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.

புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் உள்ளது. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றலாம்” எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net