யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மத போதகர்!

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மத போதகர்!

யாழில், கனடாவிற்கு அனுப்பி வைப்பதாக 35 இலட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார், நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மத போதகர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இன்றைய தினம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள ஆலயத்தில் போதகராக கடமையாற்றும் (கத்தோலிக்கம் அல்லாத) ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த போதகர் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவரிடம் இருந்து 45 இலட்சம் ரூபா பணம் வேண்டும் என கோரியுள்ளார்.

அதன்படி முதல்கட்டமாக 35 லட்சம் ரூபாவை வழங்குமாறு போதகர் கேட்டுள்ளார்.

அதன்படி, முதல் கட்ட தொகை போதகரின் வங்கியில் சம்பந்தப்பட்ட நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் வைப்புச் செய்து ஒரு வருட காலமாகியும் கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போதகர் செய்யவில்லை.

அதனால் பணத்தை வைப்பிலிட்ட நபர், வங்கியில் வைப்புச் செய்த சிட்டையை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு காவற்துறைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான போதகர் 35 லட்சம் ரூபா நிதியை மோசடி செய்துள்ளார். அவருக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிட முகவரி இல்லை.

ஆலயத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவர், அதன் முகவரியையே வழங்கியுள்ளார்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளன. மேலும் சில முறைப்பாடுகள் அவருக்கு எதிராக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்குத் தொடர்பிலும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவரை பிணையில் விடுக்கவேண்டாம் என்று சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி தவபாலன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை செய்துள்ளார்.

சந்தேகநபர் பலாங்கொடையில் பிறந்தவர். போதகர் பணிக்காக யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார்.

பிறந்த இடத்தில் நிரந்தர முகவரி இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. நான் ஏழாலையில் பிறந்தேன். நல்லூரில் வசிக்கின்றேன் என்று சமர்ப்பணம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான், பிணை மறுப்புச் சட்டத்தின் 14 (1)(பி) அடிப்படையில் சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net