தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்!

தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்!

தமிழர்கள் பிறமதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோவில்களை அமைத்து நாட்டையும் நிலத்தினையும் பிடிப்பதில்லை என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மற்றும் சமூகமேம்பாடு, இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் ஒரு அரசியல் விபத்து ஏற்பட்டது. எங்களது அரசாங்கத்தினை சில தரப்பினர் திருடமுற்பட்டனர்.

அந்த கும்பலை மக்களின் பலம் மற்றும் சட்டத்தின் பலத்துடன் நாங்கள் விரட்டி அடித்துள்ளோம்.

அதனால் எமது அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் சிலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறான விடயங்கள் சில நன்மைகளைத் தந்துள்ளன.

நாரதர் கலகம் நல்லதில் முடியும் என்பது போன்று அந்த விபத்தினால் அமைச்சரவை மாற்றப்பட்டு எனக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்திற்கு பின்னர் வேறுவேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த மூன்று காலாண்டுகளுக்கு மூன்று கோடி ரூபாவும் அடுத்த காலாண்டுகளுக்காக 09 கோடி ரூபாவும் இந்து விவகாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தினைப்போன்று இந்து சமய விவகார அமைச்சு என்பது ஒரு உறங்கும் அமைச்சாக இருக்காது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 1323 Mukadu · All rights reserved · designed by Speed IT net