மக்களின் புறக்கணிப்பே மோசடியாளர்களுக்கான தண்டனை!
மோசடியாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதுவே, அவர்களுக்கான பாரிய தண்டனை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால், இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறித்து ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
அனைத்து அரசாங்கங்களுக்குள்ளும் திருடர்களும், மோசடியாளர்களும் காணப்படுகின்றனர். அவர்களை அடையாளம் காண வேண்டும்.
இந்த மோசடிகளுக்கு தேர்தலின் மூலமே பதில் கிடைக்கும். எதிர்வரும் தேர்தலில் மோசடியாளர்களை நீக்கி எறிந்துவிட்டு, எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை தூயவர்களை ஆட்சிக்கு அமர்த்த வேண்டும்.
இதனை நிறைவேற்றும் நிலைக்கு மக்கள் முன்வர வேண்டும். மக்களின் இந்த புறக்கணிப்பே மோசடியாளர்களுக்கான பாரிய தண்டளையாக அமையும்.
அனைத்து அரசாங்கத்திற்குள்ளும் திருடர்கள் காணப்படுகின்றனர். ஆனால், கடந்த அரசாங்கத்தைவிட இந்த அரசாங்கத்தில் திருடர்கள் குறைந்துள்ளனர். தவறுகள் குறைந்துள்ளன.
ஊடக சுதந்திரம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் சுயாதீனம் என்பன அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் தோற்றம் பெறும் அரசாங்கத்தில் திருடர்களின் எண்ணிக்கை மேலும் குறையும்” எனத் தெரிவித்தார்.