மட்டக்களப்பில் முதியவரை பொல்லால் தாக்கிய நபர் கைது!

மட்டக்களப்பில் முதியவரை பொல்லால் தாக்கிய நபர் கைது!

துவிச்சக்கரவண்டியில் வீதியில் சென்ற முதியவரை பொல்லால் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதான வீதி கப்பல் ஏந்திய மாதா கோவிலுக்கு அருகில் வீதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் 23 வயது இளைஞர் ஒருவரை கடந்த புதன்கிழமை (27) கைது செய்துள்ளதுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய பொல் மற்றும் துவிச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.

பாலமீன்மடு தண்ணீர் கிணறு வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய செல்லத்துரை தெய்வேந்திரன் என்பவர் துவிச்சக்கரவண்டியில் மட்டக்களப்பு நகர்பகுதியில் இருந்து தனது வீடுநோக்கி சம்பவதினம் பிற்பகல் 3 மணியளவில் சென்றுள்ளார்.

இந்நிலையில், அமிர்தகழி பிரதான வீதி கப்பல் ஏந்திய மாதா கோவிலுக்கு அருகில் உள்ள பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் துவிச்சக்கரவண்டியுடன் வீதியில் மண்டையில் பலத்தகாயத்துடன் வீழ்ந்து கிடந்துள்ளார்.

வீதியால் பயணித்தவர்கள் எதாவது வாகனம் மோதிவிட்டுச் சென்றிருக்கும் என நினைத்து மட்டு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் 15 ஆம் திகதி சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

போக்குவரத்து பொலிஸார் விசாரணையினை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்தவரின் தலையில் அடிகாயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய மட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ஏம். தயா கீதவத்துர தலைமையிலில் பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பாளரும் பெருங்குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியுமான பி.எஸ்.சி. பண்டார. சுப் இன்பெஸ்டர் எஸ். கரிநாத். பொலிஸ் சாஜன் ஏ.எல்.எம். முஸ்தப்பா, பொலிஸ் சாஜன் ஏ.ஏ. ஜெமில், சுமணரட்ண , ரஞ்சித், இமானுவேல் ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது அப்பகுதியில் இருந்த சி.சி.ரி கெமரா மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற் கொண்ட விசாரணையில் பாலமீன்மடு தண்ணீர் கிணறு வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயபாலன் ஜெயதீபன் என்பவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த முதியோரின் தென்னம் தோப்பில் தோங்காயை களவாக பிடுங்கியதாக தற்போது சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக பொலிஸில் முறையிட்டதாகவும் அந்த முரண்பாடு காரணமாக குறித்த வயோதிபர் சம்பவதினம் மாலை தனியாக துவிச்சக்கரவண்டியில் செல்வதை அவதானித்துவிட்டு குறித்த இளைஞன் மீன்வாடியடிக்கு சென்று ஒரு பொல்லை எடுத்துக் கொண்டு அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கப்பல் ஏந்திய மாதா கோவிலுக்கு அருகில் உள்ள பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் உயிரிழந்தவர் வீதியில் துவிச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அவருக்கு அருகில் நெருங்கி என்னை ஏன் பொலிஸில் காட்டிக் கொடுத்தாய் என அவரின் மண்டையில் பொல்லால் தாக்கியதையடுத்து அவர் தலையில் படுகாயமடைந்து கீழே வீழ்ந்துள்ள நிலையில், குறித்த பொல்லை அருகிலுள்ள களப்பில் வீசி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

பின்னர் களப்பு பகுதிக்கு சென்று வீசி எறிந்த பொல்லை எடுத்துக்கொண்டு மீன்வாடியிலுள்ள படகில் வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

கொலைக்கு பயன்படுத்திய பொல்லு, அன்றைய தினம் அணிந்திருந்த ரீசேட், காற்சட்டை, துவிச்சக்கரவண்டி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 5422 Mukadu · All rights reserved · designed by Speed IT net