விடுதலை பெற்ற அபிநந்தனுக்கு அமெரிக்கா, சீனா வாழ்த்து.
பாகிஸ்தானினால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், விடுதலை பெற்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.
அபிநந்தனின் விடுதலை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது,
“இந்திய விமானி விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதுடன் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.
மேலும் இரு நாடுகளிலும் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கைகளை விரைந்த மேற்கொள்ளுங்கள்.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் மற்றும் அவர்களுக்கான நிதியுதவியை தடுப்போமென ஐ.நா.பாதுகாப்பு சபையில் வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றுமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுக்கின்றோம்” என செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் குறிப்பிட்டுள்ளதாவது, “பாகிஸ்தான் மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கையை பாராட்டுவதுடன் அதனை வரவேற்கின்றோம்.
அந்தவகையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.