யாழில் கற்றாளைச் செடிகளைக் கடத்திய தென்னிலங்கை வியாபாரிகள் கைது!
யாழ்ப்பாணம், தீவகப் பகுதியில் கற்றாழைச் செடிகளை சட்டவிரோதமாகக் கடத்திய தென்னிலங்கை வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தென்னிலங்கை வியாபாரிகள் மண்டைதீவு சந்தியில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழைத் தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர்.
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்பட்ட போது சந்தேக நபர்கள் தப்பித்துள்ளனர்.
இதனால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்டைதீவு சந்தியில் வைத்து இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் விவேகாந்த் தலைமையிலான பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனத்தினையும் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.