வெட்கித் தலைகுனிவது கிறிஸ்தவரோ இந்துக்களோ அல்ல ஒவ்வொரு தமிழனுமே!

வெட்கித் தலைகுனிவது கிறிஸ்தவரோ இந்துக்களோ அல்ல ஒவ்வொரு தமிழனுமே!

மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் நேற்றைய தினம் (03.03) ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கி பிடிந்து எறிந்துள்ளனர்

சம்பவம் பற்றி மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் ஒருவர் கூட சம்மந்தப்பட்ட இடத்திற்கு செல்லவில்லை எனவும் இருசாரான்ருக்கும் இடையில் பிரச்சினை நடப்பதற்கு சற்று நேரத்தின் முன் ஒருபாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்

அதே நேரத்தில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர் ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை என அறிய முடிகின்றது

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவித்த போது இந்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது இதில் வளைவுகள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்றும் இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் மீது பொலிஸ்’ நிலையத்தில் முறைப்பாடு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனைவரையும் அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு கட்டளை இட்டனர்

இது சம்பந்தமாக கத்தோலிக்க மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த பாதை நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும் கொங்ரீட் போட்டது தமக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள்.

இது சம்பந்தமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கும் போது இந்த பாதைக்கு வழக்குகள் இல்லை பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வளைவு துருப்பிடித்ததால் புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது இந்த செயலை செய்தார்கள் அடுத்தபடியாக இந்த வீதியில் வளைவு அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரா சபையின் அனுமதிக்கடிதம் உள்ளதாக தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நாங்கள் கிறிஸ்தவர்களை மதிக்கின்றோம்

அவர்கள் எங்கள் இரத்த உறவுகள் அதனால் அவர்கள் எங்கள் கடவுளின் வளைவுகளை பிடுங்கிய போதும் அமைதியாக நின்றோம்

இனக்கலவரத்தால் நம் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவையும் அழிவையும் சந்தித்தது உறவுகளுக்கள் மதக்கலவரத்தை நாம் விரும்பவில்லை என்று நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்தார்கள்.

இரண்டு பக்கமும் இல்லாமல் வேடிக்கை பார்த்த மக்களிடம் கருத்து கேட்ட போது நீதி மன்றத்தால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை எந்த மதமாக இருந்தாலும் சரி திருவிழா நடக்க இருக்கிறது ஒருநாள் பொறுமையாக இருந்து உடைப்பது எனில் திருவிழா முடிந்த பின் உடைத்திருக்கலாம் நாம் இப்படி கலவரங்களில் ஈடுபடுவதால் பேரினவாதிகளுக்கு சந்தர்ப்பம் அமைந்து விடும் என்கிறார்கள்

மேலும் கவலைக்கு உரிய விடயம் என்ன எனில் அங்கு நின்ற பங்கு தந்தையர்களும் இவ்வாறான சமயங்களில் நடு நிலமையாக செயற்படாமல் ஒரு சார்பானவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை குறிப்பிடதக்கது.

மறுக்கும் ஆயர்

இந்த விடயம் தொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறான சம்பவங்களுக்கும், கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லம் குறிப்பிட்டது.

பாதிரியார்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் எனவும் ஆயர் இல்லம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, திருகோணமலை – திருகோணஸ்வரம் ஆலயத்தின் வாயிலுள்ள சிவலிங்க சிலையொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் கூறுவது என்ன?

இந்த விடயம் தொடர்பில் தனது அமைச்சு முழுமையாக கவனம் செலுத்தியுள்ளதாக இந்துமத விவகார அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் இந்த விடயம் தொடர்பில் தான் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மனோ கணேஷன் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net