கத்தோலிக்கத் திருச்சபை சமய நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் இல்லை!

கத்தோலிக்கத் திருச்சபை சமய நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் இல்லை!

திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பாக வெளியாகிவரும் தகவல்கள் குறித்து மன்னார் ஆயர் இல்லம் விளக்கமளித்துள்ளது.

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,

1. மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயத்திற்கு முன்னதாக சிவராத்திரி விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவிற்கு நல்லெண்ண அடிப்படையில் நல்லிணக்கப்பாடு இருந்தது. இந்த நிலையில் இதனை உதாசீனம் செய்வது போன்று புதிதாகவும், நிரந்தரமாகவும் அலங்கார வளைவினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை 02.03.2019 சனிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலய சபை பொறுப்பாளர் திரு. இராமகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய அதிபர் திரு. தயானந்தராஜா ஆகியோரோடு ஒருஉரையாடலை மேற்கொண்டு. ஏற்கனவே இருக்கும் தற்காலிக வளைவினை பயன்படுத்துவதென்று கலந்துரையாடப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2. இவ்வாறு இருக்க, சமயநல்லிணக்கத்திற்குஎதிராக 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 75 பேருக்கும் மேற்பட்டவர்கள் கனரக வாகனங்கள், ஏற்கனவே பொருத்தி அமைக்கப்பட்ட இரும்பினாலான அலங்கார வளைவு, மற்றும் ஆயத்தம் செய்யப்பட்ட சீமெந்து கொங்கிறீட் கலவை ஆகியவற்றைக் கொண்டு வந்து. மாந்தை புனித லூர்த்து மாதா ஆலயத்திற்கு முன்பாக ஏற்கனவே இருந்த தற்காலிக வளைவினை தாங்களாகவே உடைத்து விட்டு.

புதிய அமைப்பை நிறுத்தி கொங்கிறீட் இட்டபோது அங்கு நின்ற பொது மக்களுக்கும், நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குழுவினருக்கும் இடை யே பிரச்சனை ஏற்பட்டது. இதன் போது அமைதியான முறையில் இதை அமைப்பது தொடர்பாக கலந்துரையாட முற்பட்டபோது அங்கு வளைவு அமைக்க வந்த குழுவினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துக் தகர்க்கப்படவில்லை. புதிதாக பலவந்தமாக கொங்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டன.

3. இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இவை அனைத்தும் நிகழ்வுற்று முடிவடைந்த நிலையில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆலய வெளிவாயிலுக்கு வந்து பிரச்சனைகளை ஆராய முற்பட்ட போது அவருக்கு எதிராக சில பிரச்சனைகள் எழுந்தபடியால் அங்கிருந்தவர்கள் சிலர் இதனைஆயர் இல்லத்திற்கு தெரிவிக்க,செய்தி அறிந்தவுடன் சில அருட்பணியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று மேலும் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவ்வேளையில் அங்கு வந்த பொலிசார் நிலைமைகளை அவதானித்து இரண்டு பிரிவினரையும் அங்கிருந்து அகன்று செல்லும் படியும், தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதாகவும் தெரிவித்தார்கள்.

4. தற்போது மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயம் அமைந்த காணி தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக உறுப்பினர்கள் காலஞ்சென்ற திரு. நீலகண்டன், திரு. ராமகிருஷ்ணன், ஆகியோரால் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

குறித்த வழக்கிலே காணி எல்லை, திருக்கேதீஸ்வர ஆலய தற்காலிக அலங்கார வளைவு தொடர்பான விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் இவ் அலங்கார வளைவை அமைக்க புதிதாக முற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

5. இந்த நிலைமையை அறிந்தவுடன் ஏனைய மக்களும், அருட்பணியாளர்களும் மீளவும் அங்கு ஒன்று கூடி மக்களை எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடாதவாறு அவர்கள் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

6. இது இவ்வாறு இருக்க மீளவும் 03.03.2019 மாலை 7.30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இருந்து வளைவுகட்டப்படும் இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்களோடு வந்த குழுவினர் மீளவும் புதிய வளைவினை நிர்மானிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வேளையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து அங்கு குழுமி இருந்த கத்தோலிக்க மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு கடமையில் இருந்த பொலிசார் செயற்பட்டு அனைத்தையும் மிகவும் சாதுரியமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

7. கத்தோலிக்கத் திருச்சபை பல நெடுங்காலமாக அமைதி வழித் தீர்வையே விரும்பி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் சமய நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் இப்புனித சிவராத்திரையை அனுஷ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையுறும் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net